கோழி பண்ணையில் பதுக்கி வைத்திருந்த எரிசாராயம்-போலி மதுபானம் பறிமுதல்


கோழி பண்ணையில் பதுக்கி வைத்திருந்த எரிசாராயம்-போலி மதுபானம் பறிமுதல்
x
தினத்தந்தி 7 July 2018 10:45 PM GMT (Updated: 7 July 2018 9:15 PM GMT)

நாகர்கோவில் அருகே கோழி பண்ணையில் பதுக்கி வைத்திருந்த எரிசாராயம் மற்றும் போலி மதுபானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகேயுள்ள என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவருக்கு சொந்தமான கோழி பண்ணை பொட்டல் அருகே வாத்தியார் தோப்பில் உள்ளது.

இந்த நிலையில் இவரது கோழி பண்ணையில் எரிசாராயம் மற்றும் போலி மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாகர்கோவில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று மாலை கோழி பண்ணைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஒரு மறைவான இடத்தில் நிறைய கேன்களில் எரிசாராயம் மற்றும் போலி மதுபானங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து எரிசாராயத்தையும், போலி மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் மொத்தம் 175 லிட்டர் எரிசாராயமும், 70 லிட்டர் போலி மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்பிறகு கோழி பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மாயாண்டி என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாயாண்டியை, நாகர்கோவிலில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். எரிசாராயம் மற்றும் போலி மதுபானங்கள் பிடிபட்டதை தொடர்ந்து கோழி பண்ணை உரிமையாளர் செந்தில் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Next Story