மதுபாட்டில் பெட்டிகள் சரிந்து விழுந்ததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மதுபானம்


மதுபாட்டில் பெட்டிகள் சரிந்து விழுந்ததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மதுபானம்
x
தினத்தந்தி 7 July 2018 10:45 PM GMT (Updated: 7 July 2018 9:41 PM GMT)

மினிலாரியில் இருந்த மதுபாட்டில் பெட்டிகள் சாலையில் சரிந்து விழுந்ததால் மதுபானம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

புதுச்சேரி,


புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரே தனியார் மதுக்கடைக்கு சொந்தமான குடோன் உள்ளது. நேற்று மதியம் 12 மணியளவில் அந்த குடோனில் இருந்து மினிலாரியில் பல்வேறு இடங்களில் உள்ள மதுக்கடைக்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டது. அப்போது மினிலாரியின் பின்பகுதியில் தடுப்புக்கு மேல் மதுபாட்டில்கள் பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தனர். அப்போது ஊழியர்கள் அதனை பாதுகாப்பாக கயிறு வைத்து கட்டவில்லை.

குடோனில் இருந்து மினிலாரி புறப்பட்டு மறைமலை அடிகள் சாலை பகுதிக்கு வந்த போது லாரியின் பின்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில் பெட்டிகள் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது. இதில் மதுபாட்டிகள் உடைந்து சாலையில் மதுபானம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சம்பவத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


இது பற்றிய தகவல் அறிந்த உடன் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மதுக்குடோனில் இருந்த ஊழியர்கள் உதவியுடன் ரோட்டில் உடைந்து கிடந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினர். இதனை பார்த்த உடன் குடிமகன்கள் சிலர் மதுபாட்டில்களை எடுக்க முயற்சி செய்தனர். அவர்களை ஊழியர்களும், போலீசாரும் தடுத்து நிறுத்தனர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story