சின்னமனூர் அருகே பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்


சின்னமனூர் அருகே பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 July 2018 12:00 AM GMT (Updated: 7 July 2018 11:05 PM GMT)

சின்னமனூர் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

சின்னமனூர், 

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்ராசிங்காபுரத்தை சேர்ந்த சிவன்பாண்டியன் (வயது 41) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

சின்னமனூர் அருகே உள்ள வேம்படிகளம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் ஒருவர் மோட்டார் சைக்கிளில் உர மூட்டையை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார். அவரை முந்துவதற்காக பஸ்சை வலதுபக்கமாக டிரைவர் திருப்பியுள்ளார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கோவிந்தன்பட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணி (53), அவருடைய மனைவி இந்துராணி (45), தேவாரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (40), லோயர்கேம்பை சேர்ந்த அய்யப்பன் (40) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சின்ன மனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story