கொருக்குப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி பிளஸ்-1 மாணவர் சாவு


கொருக்குப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி பிளஸ்-1 மாணவர் சாவு
x
தினத்தந்தி 7 July 2018 11:48 PM GMT (Updated: 7 July 2018 11:48 PM GMT)

கொருக்குப்பேட்டையில் மினி லாரி மோதி பிளஸ்-1 மாணவர் இறந்தார்.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் எழில்நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள். முதல் மகன் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகன் இசக்கி ஈஸ்வரன் என்ற இளங்கோ (வயது 16) சென்னை தங்கசாலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்தார்.

மாணவர் இசக்கி ஈஸ்வரனுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாட மாணவர் முடிவு செய்தார். இதற்காக அவர் தங்கசாலையில் உள்ள தனது நண்பர்களை சந்திக்க மோட்டார் சைக்கிளில் கொருக்குபேட்டை சுண்ணாம்பு கால்வாய் அருகே சென்று கொண்டிருந்தார்.

பிறந்த நாளில் பலியான மாணவர்

அப்போது அவரது பின்னால் வந்த மினிலாரி ஒன்று இசக்கி ஈஸ்வரன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இசக்கி ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் வண்ணாரபேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த இசக்கி ஈஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் மற்றும் போலீசார் விபத்தை ஏற்படுத்திய மினி லாரியை கைப்பற்றி ஓட்டுனர் மணிகண்டனை கைது செய்தனர்.

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட சென்றபோது மினி லாரி மோதியதில் மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story