எரிசாராயம்–போலி மதுபானம் பதுக்கிய வழக்கு: கோழி பண்ணை காவலாளி கைது


எரிசாராயம்–போலி மதுபானம் பதுக்கிய வழக்கு: கோழி பண்ணை காவலாளி கைது
x
தினத்தந்தி 8 July 2018 11:00 PM GMT (Updated: 8 July 2018 5:01 PM GMT)

எரிசாராயம் மற்றும் போலி மதுபானம் பதுக்கிய வழக்கில் கோழி பண்ணை காவலாளி கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்,


நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவருக்கு சொந்தமான கோழி பண்ணை பொட்டல் வாத்தியார் தோப்பில் உள்ளது. இந்த கோழி பண்ணையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கோழி பண்ணையில் தொட்டி போன்று சிறிய சுரங்கம் அமைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த சுரங்கத்தில் ஆய்வு நடத்தியபோது, அங்கு எரிசாராயம் மற்றும் போலி மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 175 லிட்டர் எரிசாராயம் மற்றும் 70 லிட்டர் போலி மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


அதன்பிறகு கோழி பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மாயாண்டி என்பவரை போலீசார் பிடித்து நாகர்கோவிலில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மாயாண்டியை போலீசார் நேற்று கைது செய்தனர். எரிசாராயம் மற்றும் போலி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து கோழி பண்ணை உரிமையாளர் செந்தில் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்ட பிறகு தான் எரிசாராயத்தை வைத்து போலி மதுபானம் தயாரிக்கப்பட்டதா? என்ற விவரங்களும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதும் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

Next Story