அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 July 2018 10:45 PM GMT (Updated: 8 July 2018 7:19 PM GMT)

போதுமான கட்டிட வசதி இல்லாததால், அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னமராவதி,

பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி கடந்த 31-7-2007-ந்தேதியில் இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளி ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதன் அருகில் 4 ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பள்ளியில் 194 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 10 ஆசிரியர்கள், மற்றும் தொகுப்பூதிய ஆசிரியர் ஒருவர் பணி புரிந்து வருகிறார். பள்ளியில் இரண்டு வகுப்புகள் மட்டுமே கட்டிடத்தில் இயங்குகின்றன. மற்ற அனைத்து வகுப்புகளும் மரத்தடியில் நடத்தப்படும் அவல நிலை உள்ளது. மேலும் இங்குள்ள மற்ற பழைய கட்டிடங்கள் இடிந்தும், கதவுகள் உடைந்து கிடப்பதால் அதில் மாணவர்கள் உட்கார முடியாத நிலையுள்ளது. இதனால் மரத்தடியில் தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சிறிது மழைபெய்தால் கூட வகுப்புகளை நடத்தமுடியாத நிலையுள்ளது. பலத்த காற்று வீசும்போது மரக்கிளைகள் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். மாணவர்கள் மண் தரையில் அமர்ந்து படிப்பதால் ஆரோக்கியம் சீர்கெடும் சூழ்நிலையும் காணப்படுகிறது. இதனால் இந்த பள்ளிக்கு கட்டிடம் கட்டவேண்டும் என பலமுறை இப்பகுதி மக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கருப்புக்குடிப்பட்டி அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story