மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்


மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 July 2018 10:30 PM GMT (Updated: 8 July 2018 7:25 PM GMT)

மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை பெறவிண்ணப் பிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற 15-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

மேலும் செப்டம்பர் 1-ந் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகைக்கான இணையதளத்தில், புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை செப்டம்படர் 15-ந்தேதிக்கு முன்பும், புதியதிற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30-ந்தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story