எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்


எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 8 July 2018 10:00 PM GMT (Updated: 8 July 2018 7:50 PM GMT)

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.


மதுரை,

மதுரை கரிமேட்டில் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சோலைராஜா தலைமை தாங்கினார். முகாமில் அமைச்சர் செல்லூர்ராஜூ, இளைஞரணி மாநில இணை செயலாளர் கிரம்மர்சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கிரம்மர்சுரேஷ் பேசியதாவது:-

இளைஞர் பருவம் என்பது சிந்திக்கக்கூடிய பருவம் என்பதை விட விரைந்து செயல்படக்கூடிய பருவம். எதையும் எதிர்பாராமல் தான்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிற செயல்வடிவம் இளைஞர் சமுதாயத்துக்கு கிடைக்கப்பெற்ற வரமாகும். அப்படிப்பட்ட இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை பாதுகாக்கின்ற வகையில் அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர்.இந்த இயக்கத்துக்காக உழைப்பவர்கள் ஒருபோதும் வீண்போகமாட்டார்கள் என்பதற்கு உதாரணம் உங்கள் மத்தியில் நிற்கின்ற நான் தான்.


எனக்கு தாயும், தந்தையுமாக இருந்து எனது அரசியல் வழிகாட்டியாக இருந்துவரும் அமைச்சர் செல்லூர்ராஜூ அ.தி.மு.க.வில் இளைஞர்களை ஊக்குவிப்பதில் மாபெரும் சக்தியாக விளங்குகிறார். உறக்கத்தையும், உணவையும் மறந்து உழைக்கக்கூடிய அமைச்சர் செல்லூர்ராஜூ, நடிக்கத்தெரியாதவர். எனவே தான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தார்.

இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படைத்தளபதியாக இருந்து மதுரையில் இயக்கத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி வருகிறார். இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. என்பதை உணர்ந்து இன்றைக்கு இளைஞர் பட்டாளம் அ.தி.மு.க.வில் இணைகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story