செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 8 July 2018 10:30 PM GMT (Updated: 8 July 2018 9:04 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை களை கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

நீலநாக்கு நோய் செம்மறி ஆடுகளை தாக்கும் முக்கியமான நோய். மழைக்காலத்திலும் அதன் தொடர்ச்சியாகவும் இந்த நோய் செம்மறி ஆடுகளை அதிகளவில் தாக்கி பெரும் இழப்பை ஏற்படுத்து கிறது. வைரஸ் எனப்படும் நச்சுக்கிருமியால் கொசுக்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்ட ஆடுகள் அதிக ஜூரத்துடன் சோர்வாக காணப்படும். மூக்கு மற்றும் உமிழ்நீர் அதிகம் ஒழுகிக்கொண்டிருக்கும். நாக்கு சில சமயம் நீலநிறமாக மாறுவது உண்டு. கால்குளம்பின் மேல்பகுதி சிவந்து வலியுடன் இருக்கும்.

இதனால் ஆடுகள் நொண்டி நடக்கும். வயிற்றுப்போக்கு, நுரையீரல் பாதிப்பு ஏற்படும். இந்த நோய் ‘கூலிக்காட்ஸ்’ எனும் ஒருவகை கொசுவால் மட்டுமே பரவுகிறது.

மழைக்காலங்களில் கொசுவின் உற்பத்தி அதிகம் உள்ளதால் நோய் அதிகமாக பரவுகிறது.

ஆடுகளை இரவு நேரங்களில் மழை மற்றும் பனி தாக்குதல் இல்லாமல் மேடான கொட்டகை அமைத்து பராமரிக்க வேண்டும்.

கொசுவை கட்டுப்படுத்தினால் மட்டுமே நீலநாக்கு நோயை கட்டுப்படுத்த முடியும். ஆட்டுக்கொட்டகையை சுற்றிலும் தண்ணீர் தேங்க விடக்கூடாது. ஆட்டுக்கொட்டகையை சுற்றி உள்ள புதர்கள் அழிக்கப்படவேண்டும். கொசுக்கள் மாலை இருட்டும் நேரத்திலும், விடியற்காலை நேரத்திலும் வந்து ஆடுகளை கடிப்பதால் இந்த நேரங்களில் ஆடுகளை வெளியே விடாமல் கொட்டகையில் அடைக்க வேண்டும்.

கொசுக்களை தவிர்க்க கொசுவர்த்திகள் மற்றும் புகைமூட்டம் வைக்க வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு தனிக்கவனம் செலுத்தி அரிசி அல்லது கம்பு கஞ்சி கொடுத்து கவனிப்பதன் மூலம் இறப்பை தவிர்க்கலாம். நோய் கண்ட ஆடுகளின் வாயிலுள்ள புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
மேலும் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை கொண்டு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். இதன்மூலம் நீலநாக்கு நோயை கட்டுப்படுத்தலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கயத்தாறு, ஓட்டப்பிடாரம், கருங்குளம் வட்டாரப்பகுதிகளில் நீலநாக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் நீலநாக்கு நோய் தாக்குதல் ஏற்படுவதை தடுப்பதற்காக ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

எனவே செம்மறி ஆடு வளர்ப்போர் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story