பண்ணைக்குள் புகுந்து 500 கோழிகளை கடித்து கொன்ற நாய்கள்


பண்ணைக்குள் புகுந்து 500 கோழிகளை கடித்து கொன்ற நாய்கள்
x
தினத்தந்தி 8 July 2018 11:30 PM GMT (Updated: 8 July 2018 10:10 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே பண்ணைக்குள் புகுந்த நாய்கள் 500 கோழிகளை கடித்து குதறி கொன்றன.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீரமுடையாநத்தத்தை சேர்ந்தவர் கருணாநிதி(வயது 45). இவர் எறும்பூர் கிராமத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். அதில் 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி, கருங்கோழி, கினியாக்கோழி போன்றவற்றை வளர்த்து வந்தார். இரவில் கோழிகளை கண்காணிக்க காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு காவலாளி பணிக்கு வரவில்லை. எனவே கருணாநிதி, கோழிப்பண்ணையை சுற்றிலும் இரும்பு வேலி அமைத்துவிட்டு, வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலையில் கருணாநிதி பண்ணைக்கு வந்தார். அப்போது பண்ணையில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள், அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. கோழிகள் சத்தமிட்டபடி இருந்தன.

அருகில் வந்து பார்த்தபோது நாய்கள், கோழிகளை கடித்து குதறிக்கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கருணாநிதி, உருட்டுகட்டையுடன் பண்ணைக்குள் சென்று, நாய்களை விரட்டியடித்தார். கோழிப்பண்ணை முழுவதும் ஆங்காங்கே கோழிகள் செத்துக்கிடந்தன.

இரவு காவலாளி இல்லாததால் 10-க்கும் மேற்பட்ட நாய்கள், பண்ணைக்குள் புகுந்து 500-க்கும் மேற்பட்ட கோழிகளை கடித்து குதறி கொன்றது தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் கால்நடை மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் குழி தோண்டப்பட்டு, அதில் இறந்த கோழிகளை போட்டு மூடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story