ரூ.8 லட்சத்தில் கட்டி 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன்கடை


ரூ.8 லட்சத்தில் கட்டி 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன்கடை
x
தினத்தந்தி 8 July 2018 10:42 PM GMT (Updated: 8 July 2018 10:42 PM GMT)

வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத்தில் ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன்கடை கட்டிடம் 2 ஆண்டுகளாக திறக்கப்படாததால் அந்த இடத்தை குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.

வாணியம்பாடி,

வாணியம்பாடி தாலுகா அளவில் 130 ரேஷன்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 25 கடைகள் பகுதி நேர கடைகளாகும். பெரும்பாலான கடைகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு அவற்றில் ரேஷன்கடைகள் இயங்கி வருகின்றன. ஆனால் சில ஊர்களில் சொந்த கட்டிடம் கட்டியும் அந்த கட்டிடத்திற்கு ரேஷன்கடையை இடமாற்றம் செய்யாமல் வாடகைகட்டிடத்திலேயே இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு ரேஷன்கடை தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன்கடைக்காக ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கழிப்பறை வசதியுடன் நவீன முறையில் கட்டப்பட்டது. பணிகள் முடிந்தபின்னர் இதனை திறக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2 ஆண்டுகள் ஆகியும் திறக்காததால் அந்த கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. அந்த பகுதியில் வசிப்போர் இந்த பகுதியை குப்பை கொட்டும் இடமாக மாற்றிவிட்டனர். மேலும் இங்கு கட்டப்பட்டுள்ள கழிப்பறையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடமும் சேதமாக தொடங்கி வருகிறது. இதனால் இதற்காக ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட நிதி பயனற்று போய்விட்டது.

அதே நேரத்தில் தனியார் கட்டிடத்தில் ரேஷன்கடை இயங்குவதால் அந்த கடைக்கு மாத வாடகையாக ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுக்கப்படுவதால் மக்களின் வரிப்பணம் விரயமாகி வருகிறது.

இந்த விஷயத்தில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ரேஷன்கடையை இடமாற்றம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story