சேலத்தில் சந்துக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்


சேலத்தில் சந்துக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 8 July 2018 11:17 PM GMT (Updated: 8 July 2018 11:17 PM GMT)

சேலத்தில் சந்துக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.


சேலம்,

சேலம் அம்மாப்பேட்டை கார்பெட் தெருவில் சந்துக்கடை வைத்து ஒருவர் சட்ட விரோதமாக மதுபானம் விற்று வருகிறார். இங்கு மது அருந்துவதற்காக தினமும் ஏராளமான ஆண்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மது அருந்தி விட்டு வந்த ஒருவர் அங்கு உள்ள பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு உள்ள மிலிட்டரி ரோட்டில் கூடினர். பின்னர் சந்துக்கடையை அகற்றக்கோரியும், சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து நடவடிக்கை எடுக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சந்துக்கடை உடனே அகற்றப்படும். மேலும் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இது குறித்து பொது மக்கள் கூறும் போது சந்துக்கடையை அகற்றக்கோரி பல முறை கோரிக்கை வைத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்டோம் என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் நேற்று இரவு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

Next Story