காசர்கோடு அருகே ஜீப்-லாரி மோதல்: பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி சாவு


காசர்கோடு அருகே ஜீப்-லாரி மோதல்: பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 9 July 2018 6:57 PM GMT (Updated: 9 July 2018 7:04 PM GMT)

காசர்கோடு அருகே ஜீப்-லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் மங்களூருவை சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.

மங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அஜ்ஜினடுக்கா பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் (வயது 41). இவர் தனது குடும்பத்தினர் 13 பேருடன் ஒரு ஜீப்பில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் முஸ்தாக் உள்பட 13 பேரும் ஜீப்பில் காசர்கோடு வழியாக மங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

ஜீப்பை முஸ்தாக் ஓட்டி வந்தார். நேற்று காலை 6 மணி அளவில் காசர்கோடு அருகே நஜாபஜார் பகுதியில் உப்பளா எர்ணாகுளம்-புனே தேசிய நெடுஞ்சாலையில் ஜீப் வந்து கொண்டிருந்தது. அப்போது மங்களூருவில் இருந்து காசர்கோடு நோக்கி சென்ற லாரியும், ஜீப்பும் எதிர்பாரதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஜீப்பின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில் ஜீப்பில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்ததும் அந்தப் பகுதி மக்கள், உப்பாளா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உப்பாளா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல் பலியான 5 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு உப்பாளா பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் முஸ்தாக், பி.பாத்திமா (65), அஸ்மா (30), நசீமா (38), இம்தியாஸ் (35) ஆகியோர் என்பதும், இவர்கள் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது.

இதுகுறித்து உப்பாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஜீப்-லாரி மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் காசர்கோடு மற்றும் மங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story