கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்


கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 9:30 PM GMT)

தொட்டமஞ்சி அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்பறைக்கு பெற்றோர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொட்டமஞ்சி மலைக்கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 250 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணி புரிந்து வந்தனர். இதில் ஒரு ஆசிரியை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லை.

இந்தநிலையில் அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களின் பெற்றோர் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வகுப்பறைக்கு பூட்டு போட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் சேகர் மற்றும் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கு வந்து மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கிறது என்று வலியுறுத்தினர்.

அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அலுவலர் உறுதியளித்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள், பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பெற்றோர் பள்ளிக்கு பூட்டு போட்டும், மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story