சித்தோடு அருகே பொக்லைன் டிரைவரை அடித்து உதைத்து மோட்டார்சைக்கிள் பறிப்பு


சித்தோடு அருகே பொக்லைன் டிரைவரை அடித்து உதைத்து மோட்டார்சைக்கிள் பறிப்பு
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 9:54 PM GMT)

சித்தோடு அருகே நள்ளிரவில் பொக்லைன் டிரைவரை அடித்து உதைத்து மோட்டார்சைக்கிளை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பவானி, 

தர்மபுரி மாவட்டம் அக்னஹள்ளியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 24). பொக்லைன் டிரைவர். கேரள மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியில் பொக்லைன் ஓட்டி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவில் இருந்து அக்னஹள்ளியில் உள்ள வீட்டுக்கு கார்த்தி வந்தார். பின்னர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் கேரளாவுக்கு புறப்பட்டார்.

நள்ளிரவு 1½ மணி அளவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரி அருகே வந்தபோது, மோட்டார்சைக்கிளின் என்ஜின் சூடானதால் ரோட்டு ஓரமாக நிறுத்திவிட்டு நின்றுகொண்டு இருந்தார்.

அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் 3 பேர் அங்கு வந்து நின்றார்கள். அதன்பின்னர் நீ யார்? இங்கே எதற்காக நிற்கிறாய்? என்று கேட்டுள்ளார்கள். அதற்கு கார்த்தி கேரள சென்றுகொண்டு இருப்பதாக கூறியுள்ளார். உடனே 3 பேரும் அவரை அடித்து உதைத்து மோட்டார்சைக்கிளின் சாவியை பறித்துக்கொண்டார்கள்.

பிறகு அவரிடம் இருந்த செல்போன், மற்றும் மணிபர்சையும் எடுத்துக்கொண்டார்கள். அதில் 1000 ரூபாய் இருந்துள்ளது. பின்னர் சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு கார்த்தியின் மோட்டார்சைக்கிளையும் ஓட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார்கள்.

அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் கார்த்தியால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. அதன்பிறகு சிறிது நேரம் கழித்து சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியிடம் இருந்து மோட்டார்சைக்கிள், செல்போன், பணம் பறித்துச்சென்ற மர்ம நபர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story