கோவில்பட்டி அருகே மினி பஸ் மோதியதில் 3 மின்கம்பங்கள் சரிந்தன பொதுமக்கள் சாலைமறியல்


கோவில்பட்டி அருகே மினி பஸ் மோதியதில் 3 மின்கம்பங்கள் சரிந்தன பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 10 July 2018 10:00 PM GMT (Updated: 10 July 2018 12:26 PM GMT)

கோவில்பட்டி அருகே மினி பஸ் மோதியதில் 3 மின்கம்பங்கள் சரிந்தன. இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே மினி பஸ் மோதியதில் 3 மின்கம்பங்கள் சரிந்தன. இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மின்கம்பத்தில் மோதிய மினி பஸ்

கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பில் இருந்து நேற்று காலையில் தனியார் மினி பஸ், கோவில்பட்டிக்கு புறப்பட்டது. கோவில்பட்டி முடுக்கலாங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த துரைபாண்டியன் மகன் சண்முகராஜ் மினி பஸ்சை ஓட்டிச் சென்றார். அந்த மினி பஸ்சில் பள்ளிக்கூட மாணவ–மாணவிகள், பொதுமக்கள் பயணம் செய்தனர்.

மந்திதோப்பை கடந்து மெயின் ரோடு அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய மினி பஸ் சாலையோர மின்கம்பத்தில் வேகமாக மோதியது. இதில் அந்த மின்கம்பம் சரிந்து விழுந்ததுடன், அதன் அருகில் உள்ள மேலும் 2 மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. உடனே மினி பஸ்சை நிறுத்தி விட்டு, டிரைவர் சண்முகராஜ் தப்பி ஓடி விட்டார்.

சாலைமறியல்

இதுகுறித்து அப்பகுதியினர் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே சேதம் அடைந்த மின்கம்பங்களை உடனே மாற்ற வேண்டும். மினி பஸ்களை வேக கட்டுப்பாட்டுடன் மெதுவாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடனே கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மின்கம்பங்கள் சரிந்து விழுந்தபோது, அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story