நாங்குநேரி அருகே பயங்கரம் மணல் கடத்தல் தகராறில் வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை அண்ணன்– தம்பிக்கு வலைவீச்சு


நாங்குநேரி அருகே பயங்கரம் மணல் கடத்தல் தகராறில் வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை அண்ணன்– தம்பிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 July 2018 10:00 PM GMT (Updated: 10 July 2018 12:41 PM GMT)

நாங்குநேரி அருகே மணல் கடத்தல் தகராறில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

நாங்குநேரி, 

நாங்குநேரி அருகே மணல் கடத்தல் தகராறில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக அண்ணன்– தம்பி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

தொழில் போட்டி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் சுப்பையா (வயது 24). அவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த சுடலைக்கண்ணு (35). இவர்கள் இருவரும் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். நம்பியாற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இதற்கிடையே சூரங்குடியில் உள்ள சுடலைக்கண்ணுவின் ஆதரவாளர் வீட்டை சூறையாடிய வழக்கில் சுப்பையா கைதாகி, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். ஏற்கனவே சுப்பையா மற்றும் சுடலைக்கண்ணு, அவரது தம்பி ஆறுமுகம் (32) ஆகிய 3 பேர் மீதும் போலீசில் மணல் கடத்தல் வழக்குகள் உள்ளன.

தகராறு

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மணல் கடத்தல் வழக்கில் சுடலைக்கண்ணுவின் தம்பி ஆறுமுகத்தை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். தனது தம்பியை போலீசில் காட்டிக் கொடுத்தது தான் சுப்பையா தான் என நினைத்த சுடலைக்கண்ணு, அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவில் சுப்பையாவின் வீட்டுக்கு சுடலைக்கண்ணு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைக்கவே சுடலைக்கண்ணு அங்கிருந்து சென்று விட்டார்.

இதையடுத்து சுப்பையா, சுடலைக்கண்ணு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் இல்லாததால் ஆத்திரத்தில் அவரது வீட்டின் கதவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் சுடலைக்கண்ணு புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மஞ்சங்குளம் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் வருவதை அறிந்த சுப்பையா, அங்கிருந்து ஓடி மஞ்சங்குளம் அருகே ஜீயர்குளம் காலனி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்று பதுங்கினார்.

அரிவாளால் வெட்டிக் கொலை

இதனை தெரிந்து கொண்ட சுடலைக்கண்ணு, அவரது தம்பி ஆறுமுகம் ஆகியோர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் தோட்டத்துக்கு சென்றுள்ளனர். இருவரும் அரிவாளுடன் வருவதை பார்த்த சுப்பையா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது சுடலைக்கண்ணு, ஆறுமுகம் ஆகிய இருவரும் துரத்திச் சென்று சுப்பையாவை பிடித்தனர்.

பின்னர் அரிவாளால் சுப்பையாவை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் கழுத்து, தொடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சுப்பையா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

அண்ணன்– தம்பிக்கு வலைவீச்சு

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, நாங்குநேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சுப்பையாவின் உடலை போலீசார் கைப்பற்றி நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அண்ணன், தம்பி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். மணல் கடத்தல் தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story