குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 10 July 2018 9:15 PM GMT (Updated: 10 July 2018 2:45 PM GMT)

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்திருப்பேரை, 

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முத்துமாலை அம்மன் கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கோவிலில் ஆனி கொடை விழா கடந்த 8–ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் காலையில் அம்மன் தங்கமுக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் சிறப்பு பூஜைக்கு பின்னர் நாராயணசாமி சிறிய சப்பரத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆனி கொடை விழா

விழாவின் சிகர நாளான நேற்று ஆனி கொடை விழா நடந்தது. மதியம் விநாயகர், அம்மன், நாராயணர், பெரிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவைவாழ் குரங்கணி இளைஞர்கள் மற்றும் நண்பர்கள் அன்னதான குழுவினரால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனர். பக்தர்கள் தங்களது உடல் பாகங்களில் குறைபாடுகள் நீங்க, அந்த பாகங்களை மரக்கட்டையாக செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மேலும் மாவு விளக்கில் தீபம் ஏற்றி, நோயால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைத்தும் வழிபட்டனர். உப்பு, மிளகு செலுத்தியும், பானகரம் வழங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சப்பர பவனி

இரவில் கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் நடந்தது. பின்னர் ஆனி கொடை விழா சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன், அறங்காவலர்கள் ஜெயராஜ், ஜெயமுருகன், மேனகா, சேர்மதங்கம், சென்னைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர் முத்துமாலை, ஜெயராஜ், பெரியசாமி, ஸ்ரீதரன், ராஜேந்திரன், ஜெயந்தி அன்பழகன்,

முத்துமாலை டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சந்திரசேகரன், வாசுதேவன், கார்த்திகேயன், ராகவன், கண்ணன் பண்ணையார், நல்லாசிரியர் ராமச்சந்திரன், குமரன் பிராண்ட் பாலகிருஷ்ணன், ரவி, கோவைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர் மகா சப்தசாகரன், துரைராஜ், பாலகிருஷ்ணன், தங்கராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகள்

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் கோவிலுக்கு வந்தனர். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் குரங்கணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் பனை ஓலைகளால் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கினர்.

விழா நாட்களில் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் அஜித் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர், கோவைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.


Next Story