தனியார் நர்சரி பள்ளியை நல்லூர் பள்ளிக்கு மாற்ற பெற்றோர் எதிர்ப்பு: மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகை


தனியார் நர்சரி பள்ளியை நல்லூர் பள்ளிக்கு மாற்ற பெற்றோர் எதிர்ப்பு: மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 10 July 2018 10:30 PM GMT (Updated: 10 July 2018 7:00 PM GMT)

தனியார் பள்ளியை நல்லூரில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு மாற்ற பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி இமாம்கான் வீதியில் கேசவ் வித்யா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிலையில் திடீரென்று பள்ளியை மூடி விட்டு, நல்லூரில் உள்ள அதே பள்ளிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) வெள்ளிங்கிரியிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி இமான்கான் வீதியில் செயல்பட்டு வரும் கேசவ் வித்யா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 2–ந்தேதி முதல் பள்ளி திறக்கப்பட்டு இயங்கி வந்தது. தற்போது கடந்த 2–ந்தேதி பள்ளி அறிவிப்பு பலகையில் இந்த பள்ளி இனி இங்கு செயல்படாது என்றும், பள்ளி பொள்ளாச்சி–பாலக்காடு ரோடு நல்லூரில் உள்ள தலைமை மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாத காரணத்தால் மாற்றப்படுகிறது என்று காரணம் கூறினார்கள். பெற்றோர்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் பள்ளி உள்ளதால் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். இந்த திடீர் அறிவிப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். பள்ளி கடந்த 3 நாட்களாக விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு வாரத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க இந்த ஆண்டு இமான்கான் வீதியில் பள்ளி இயங்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story