தபால் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


தபால் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 10 July 2018 8:00 PM GMT (Updated: 10 July 2018 8:00 PM GMT)

கணினி தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யக்கோரி தபால் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தபால் அலுவலகங்கள் கணினி மயமாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சேமிப்பு கணக்கில் வரவு- செலவு, தபால் மற்றும் மணியார்டர் அனுப்புதல், காப்பீடு தொகை செலுத்துதல் போன்ற பணிகள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கணினியில் உள்ள தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக இந்த பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே கணினி தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய வேண்டும் என்று தபால் ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தபால் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்துக்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.சாமிநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பாலமோகன்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தபால் ஊழியர்கள் கூறும்போது, “ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் தலைமை தபால் அலுவலகங்களும், 65 துணை தபால் அலுவலகங்களும், 254 கிளை தபால் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் 22-ந் தேதி முதல் தபால் அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தபால் அனுப்புவது முதல் அனைத்து பணிகளும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே தொழில்நுட்ப கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்”, என்றனர். இதில் தபால் ஊழியர் சங்க நிர்வாகிகள் என்.கார்த்திகேயன், ஏ.எழில்வாணன், எஸ்.கார்த்திகேயன், பி.கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story