பால்கர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: மும்பை ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின - 2 ஆயிரம் பயணிகள் மீட்பு


பால்கர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: மும்பை ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின - 2 ஆயிரம் பயணிகள் மீட்பு
x
தினத்தந்தி 10 July 2018 10:08 PM GMT (Updated: 10 July 2018 10:08 PM GMT)

பால்கர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் மும்பை வந்த 2 ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின. பயணிகள் 2 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வசாய்,

பால்கர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கொட்டித்தீர்த்த கனமழையால் அந்த மாவட்டத்தில் உள்ள வசாய், விரார் உள்ளிட்ட நகர பகுதிகள் மட்டுமின்றி பல கிராமங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். நேற்று பெய்த கனமழையால் வசாய் மாணிக்பூரில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில், அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் உள்பட 66 பேர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் மிதவைகளில் சென்று அவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். இதேபோல பால்கர் பொய்தாபாடா பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வீடுகளில் சிக்கி 120 பேர் தவித்தனர். அவர்களையும் மிதவைகளில் சென்று தீயணைப்பு படையினர், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டனர்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள நாலச்சோப்ரா ரெயில் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக இந்த ரெயில் நிலையத்தில் 2-வது நாளாக நேற்றும் ரெயில் சேவை முடங்கியது. இந்தநிலையில் மும்பை நோக்கி வந்த வதோதரா மற்றும் சதாப்தி ரெயில்கள் நேற்று காலை நாலச்சோப்ரா- வசாய் இடையே தண்டவாளத்தில் சூழ்ந்து இருந்த வெள்ளத்தில் சிக்கியது.

இதையடுத்து அந்த ரெயில்கள் அங்கேயே நடுவழியில் நிறுத்தப்பட்டது. வெளியே இறங்கி செல்ல முடியாத அளவுக்கு அந்த பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து இருந்ததால் பயணிகள் ரெயிலுக்குள்ளேயே செய்வதறியாது தவித்தனர்.

இந்தநிலையில், பயணிகளை மீட்க மேற்கு ரெயில்வே தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரின் உதவியை நாடியது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ரெயிலில் சிக்கித்தவித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் நாலச்சோப்ரா அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மும்பை வருவதற்கு பஸ்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

மேலும் நடுவழியில் நின்ற சில ரெயில்களில் தவித்த பயணிகளுக்கு சுமார் 2 ஆயிரம் உணவு பொட்டலங்கள் சிறப்பு ரெயில் மூலம் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டன.

Next Story