திருச்சியில் பயங்கரம் அரியலூரை சேர்ந்த வாலிபர் குத்திக்கொலை காவிரி ஆற்றில் உடல் வீச்சு


திருச்சியில் பயங்கரம் அரியலூரை சேர்ந்த வாலிபர் குத்திக்கொலை காவிரி ஆற்றில் உடல் வீச்சு
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 6:49 PM GMT)

அரியலூரை சேர்ந்த வாலிபர் திருச்சியில் மர்ம நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரது உடல் காவிரி ஆற்றில் கிடந்தது.

ஸ்ரீரங்கம்,

திருச்சி திருவானைக்காவலை அடுத்த திருவளர்ச்சோலையில் புத்துநாகம்மன் கோவில் அருகே காவிரி ஆற்று பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது காவிரி ஆற்றுக்குள் கரையையொட்டி 35 வயதுடைய வாலிபர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்தவரின் கழுத்து, மார்பு பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

உடலில் இருந்து ரத்தம் வழிந்தோடி இருந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் கொலை நடந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிய வந்தது. இதனால் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என்று சரியாக தெரியவில்லை?. சம்பவ இடத்துக்கு மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் உடல் கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு காவிரி ஆற்றுக்குள் சிறிதுதூரம் ஓடி சென்று ஆற்றின் நடுவே நின்று விட்டது. கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கருப்புநிற டி-ஷர்ட்டும், நீலநிற ஜீன்ஸ்-ம் அணிந்து இருந்தார். அவரது கைவிரலில் சாய்பாபா உருவம் பொறித்த மோதிரம் இருந்தது.

இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்தவர் அணிந்து இருந்த உடையின் நிறம், அவர் விரலில் இருந்த சாய்பாபா மோதிரம் உள்ளிட்ட தகவல்களை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவித்து சமீபத்தில் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என விசாரித்தனர். அப்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பி பகுதியை சேர்ந்த முடநீக்கியல் நிபுணர் விஜயகுமார் (வயது 36) கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகி இருந்ததும், இது குறித்து அவரது மனைவி கற்பகாம்பிகா செந்துறை போலீஸ் நிலையத்தில் கடந்த 9-ந் தேதி புகார் அளித்து இருந்ததும் தெரியவந்தது.

உடனே ஸ்ரீரங்கம் போலீசார் கற்பகாம்பிகாவை திருச்சிக்கு வரவழைத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த உடலை காண்பித்தனர். அப்போது அந்த உடலை பார்த்த அவர் அது தனது கணவர் விஜயகுமார் தான் என்று கூறி கதறி அழுதார். இதையடுத்து விஜயகுமார் மர்ம நபர்களால் திருச்சிக்கு கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?, அவருக்கு யார், யாருடன்? முன்விரோதம் இருந்து வந்தது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி டிரைவர் ஆண்டவர் அடித்து கொலை செய்யப்பட்டு மேலூர் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் அரியலூரை சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவளர்ச்சோலை பகுதியில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகில் 2 கி.மீட்டர் தொலைவில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story