திருமணம் ஆன ஒரு மாதத்தில் போலீஸ்காரர் சாவு: மனம் உடைந்து வாழ்ந்த மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் ஆன ஒரு மாதத்தில் போலீஸ்காரர் சாவு: மனம் உடைந்து வாழ்ந்த மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 July 2018 9:15 PM GMT (Updated: 11 July 2018 7:31 PM GMT)

திருமணம் ஆன ஒரு மாதத்தில் போலீஸ்காரர் இறந்ததால் மனம் உடைந்து வாழ்ந்த அவரது மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கமகளூரு,

திருமணம் ஆன ஒரு மாதத்தில் போலீஸ்காரர் தற்கொலை செய்தார். இதனால் மனம் உடைந்து வாழ்ந்து வந்த அவரது மனைவியும் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் ஆன 2 மாதங்களில் இந்த சோகம் நிகழ்ந்து உள்ளது.

சிக்கமகளூரு டவுனை சேர்ந்தவர் அனில். இவர் சிக்கமகளூருவில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் சிக்கமகளூரு அருகே உள்ள கம்பிஹள்ளி பகுதியை சேர்ந்த சாந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த மாதம்(ஜூன்) அனில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் கம்பிஹள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சாந்தினி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் சிக்கமகளூரு புறநகர் போலீசார் அங்கு சென்று சாந்தினியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கணவர் இறந்த துக்கத்தில் இருந்து வந்த சாந்தினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன 2 மாதங்களிலேயே கணவன், மனைவி 2 பேரும் தூக்குப்போட்டு தங்களின் உயிரை மாய்த்து கொண்ட பரிதாப சம்பவம் சிக்கமகளூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story