கல்குவாரியில் வெடி வெடித்த அதிர்ச்சியில் பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது 2 மாணவர்கள் படுகாயம்


கல்குவாரியில் வெடி வெடித்த அதிர்ச்சியில் பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது 2 மாணவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 7:38 PM GMT)

கல்குவாரியில் வெடி வெடித்த அதிர்ச்சியில் அரசு பள்ளி அறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வழக்கம் போல் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு மேல் 6-ம் வகுப்பு நடந்து கொண்டிருந்த அறையின் மேற்கூரை சிமிண்டு பூச்சு திடீரென பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்தது. உடனே அறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேறி உள்ளனர்.

இந்தநிலையில் நரிக் குளத்தை சேர்ந்த கணேஷ் குமார், சிவலிங்கபுரத்தை சேர்ந்த மவீன் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்களை அழைத்து சென்றார்.


சிகிச்சைக்கு பின்பு மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அந்த பகுதி கிராம மக்கள் கூறும் போது, பள்ளியின் அருகே, சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் நடத்தி வரும் கல் குவாரி இயங்கி வருகிறது. அங்கு பாறைகளை உடைக்க வைக்கப்படும் வெடியின் அதிர்ச்சி காரணமாக பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது என்றனர்.

மேலும் கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் எதிர்ப்பை மீறி குவாரி செயல்பட்டு வருவதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர். மேலும் இந்த குவாரியால் பள்ளி கட்டிடம் சேதமாகி வருவதால், மாவட்ட நிர்வாகம் பள்ளி அருகே உள்ள குவாரியை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கீழராஜகுலராமன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story