6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி


6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 7:53 PM GMT)

நடப்பு கல்வி ஆண்டில் 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. எனவே மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும், எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலும் பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கரூர்,

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம், 11-ம் வகுப்புக்கு அரசுத்தேர்வு நடத்துதல், உயர்கல்வி படிக்க ஆலோசனை வழங்குதல், ‘நீட்’ உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல் என தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டில் இருந்து புதிய பாடத்திட்டத்தின்கீழ் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

இதில் புத்தகத்தில் உள்ள குறியீட்டினை தங்களது ஆன்டிராய்டு போனில் ஸ்கேன் செய்து தத்ரூபமாக அறிவியல் உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை பற்றி வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்வது என்பன உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள் அதற்கேற்ற வகையில் தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டு மாணவர்களுக்கு எளிதில் பாடம் எடுப்பது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டது.

அந்த வகையில் கரூர் கல்வி மாவட்டத்தில் 9-ம் வகுப்புக்கு அறிவியல் பாடம் எடுத்து வரும் 100 ஆசிரிய-ஆசிரியைகளுக்கு சிறப்பு பயிற்சி கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பயிற்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன் தலைமை தாங்கி பேசும் போது, பாடங்களை மாணவர்கள் மனதில் பதியும்படி சொல்லி கொடுக்க வேண்டியது ஆசிரியரின் கடமை யாகும். எனவே இந்த பயிற்சி ஆசிரியர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.

மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) கனகராஜ் முன்னிலை வகித்தார். கருத்தாளர்கள் பாபு, மாரியப்பன், சரவணன், அன்பு உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கணிதம், சமூக அறிவியல் என ஆசியர்களுக்கு சுழற்சி முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதே போல் 6, 11-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story