பெரியநாயக்கன்பாளையம் அருகே விநாயகர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு


பெரியநாயக்கன்பாளையம் அருகே விநாயகர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு
x
தினத்தந்தி 11 July 2018 9:45 PM GMT (Updated: 11 July 2018 9:00 PM GMT)

பெரியநாயக்கன்பாளையம் அருகே விநாயகர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இடிகரை,

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டிபிரிவில் பயனியர் நகரில் வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை 6 மணி அளவில் கோவிலுக்கு வந்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

கோவிலின் உள்ளே இருந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை மற்றும் உற்சவ மூர்த்தியான விநாயகர் சிலை ஆகியவை திருடு போய் இருந்தது. சிவகாமி அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒரு பவுன் நகையையும் காணவில்லை. மேலும் கோவிலுக்குள் இருந்த உண்டியலும் மாயமாகி இருந்தது.

உடனே இதுகுறித்து கோவில் பூசாரி, பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்குதகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ்துணை சூப்பிரண்டு மணி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மியான்டிட் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.திருடு போன சிலைகளின் மதிப்பு ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இந்த கோவிலில் அடுத்த வாரம் ஆடிமாத திருவிழா கொண்டாட ஊர்மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த திருட்டு நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் கோவிலில் சிலைகள் திருட்டு சம்பவம் பரபரப்பாக பேசப்படும் இந்தநிலையில் தற்போது விநாயகர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடு போனது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார்இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

Next Story