சிறுவன் கொலை வழக்கில் வாலிபர் கைது


சிறுவன் கொலை வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 8:48 PM GMT)

இலங்கை அகதி முகாம் அருகே சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை,

மதுரை உச்சப்பட்டி அகதி முகாமை சேர்ந்தவர் சந்திரதாசன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் கெஸ்மன் (வயது 7) இந்த சிறுவன் அதே பகுதியில் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். திண்டுக்கல் மாவட்டம் கோபாலால்பட்டி அகதி முகாமை சேர்ந்த தவராஜின் மகன் அனுஷன் (19). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கெஸ்மனை வெளியே அழைத்து சென்றார். பின்பு அவர் மட்டும் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் உச்சப்பட்டி முனியாண்டி கோவில் அருகே உள்ள கல்குவாரி தண்ணீரில் கெஸ்மன் பிணமாக மிதந்தான். அவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதிய ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அனுஷனை விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

இந்தநிலையில் சந்திரதாசன், அவரது உறவினர்கள் மற்றும் அகதி முகாமை சேர்ந்தவர்கள் நேற்று திடீரென கெஸ்மன் சாவு குறித்து முழுமையான நீதிவிசாரணை செய்து, அனுஷனை கைது செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அனுஷனை கைது செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.


*மதுரை கரிமேடு ராஜேந்திரா 1-வது தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் (54). கஞ்சா வியாபாரியான இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். அதன் பேரில் பூமிநாதனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

* மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி(57), எல்லீஸ்நகர் பை-பாஸ் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி இறந்துபோனார்.

* மதுரை கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த பிச்சைகனி (43) மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் அழகர்கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், பிச்சைகனியின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

* மதுரை காளவாசல் பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர் மகனுடன் மோட்டார் சைக்கிளில் பை-பாஸ் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயம் அடைந்த ராஜேந்திரன், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

பஸ்சில் திருட்டு

* புதுக்கோட்டை மாவட்டம் செம்பத்துரை சேர்ந்தவர் மீனாலட்சுமி (58). இவர் உறவினருடன் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சில் சென்றபோது, அவர் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் திருடுபோய்விட்டது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

*மதுரை ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம்(57), ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் மிக்சி பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்து கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடிகள் ராஜ்குமார்(25), அசோக்குமார்(25), பாலமுருகன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story