பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x
தினத்தந்தி 11 July 2018 11:30 PM GMT (Updated: 11 July 2018 9:14 PM GMT)

பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சார வரியை குறைக்குமாறு எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய எம்.எல்.ஏ.க்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்பட சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் முடிவுகளை கைவிடுமாறு குமாரசாமிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் மின்சாரம் மீது உயர்த்தப்பட்டுள்ள வரியை வாபஸ் பெறவும் வலியுறுத்துமாறு அவர்கள் கூறினர்.

பட்ஜெட்டில் வட கர்நாடகம் புறக்கணிக்கப்பட்டதாக எச்.கே.பட்டீல் எம்.எல்.ஏ. எழுதிய கடிதத்திற்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினர். அன்ன பாக்கிய திட்டத்தில் 2 கிலோ அரிசியை குறைத்ததற்கு எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த விஷயத்தில் முன்பு இருந்த நிலையே தொடர்ந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டதை கூட்டி, வட கர்நாடகத்திற்கு பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ள அநீதி குறித்து விவாதித்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு எம்.எல்.ஏ.க்கள் கூறினர். கர்நாடக மேல்-சபை தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்க வேண்டும் என்றும், அந்த பதவியை எக்காரணம் கொண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறினர்.

இந்த கூட்டத்தில் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் எச்.கே.பட்டீல், சதீஸ் ஜார்கிகோளி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவில்லை. வேறு சில காரணங்களினால் இன்னும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை என்று காங்கிரசார் தெரிவித்தனர்.

Next Story