கிருஷ்ணகிரியில் பரபரப்பு அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து


கிருஷ்ணகிரியில் பரபரப்பு அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 10:01 PM GMT)

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பலரும் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு புற நோயாளிகள் வந்து செல்லும் கட்டிடத்தின் பின்புறம் நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கும் இடம் உள்ளது.

இதன் அருகில் உள்ள கட்டிடத்தின் உள்ளே இருந்து நேற்று காலை திடீரென புகை வந்தது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மின் இணைப்பு பெட்டி தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மணிமாறன், சற்குணன், சதீஷ் மற்றும் தென்னரசு ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மின் இணைப்பு பெட்டியில் தீப்பிடித்ததால், ஆஸ்பத்திரியின் சில பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உயர் அழுத்தம் மின்சாரம் காரணமாக மின் இணைப்பு பெட்டியில் தீப்பிடித்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். 

Next Story