வந்தவாசியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
வந்தவாசியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள், அதே பகுதியில் உள்ள 2 வீடுகளில் திருட முயன்றுள்ளனர்.
வந்தவாசி,
வந்தவாசி டவுன் பொட்டி நாயுடு தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 45). மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்துமதி. இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வெளிப்புற கேட்டுகளை பூட்டி விட்டு, கதவின் உட்புற தாழ்ப்பாளை போட்டுவிட்டு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை 2 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து பார்த்தனர். அதில் தங்க நகைகள் எதுவும் இல்லை. இதனால் வெள்ளி பொருட்களை எடுத்துக்கொண்டு, மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த இந்துமதியின் கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியை இழுத்தனர். அப்போது கண் விழித்து பார்த்த இந்துமதி அதிர்ச்சி அடைந்து திருடன், திருடன் என கூச்சல் போட்டார். ஆனால் அவர்கள் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
மர்ம நபர்கள் அதே தெருவில் உள்ள குறுக்குத் தெருவில் உள்ள ஜெய்சங்கர் என்பவருடைய வீட்டின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். பூட்டை உடைக்க முடியாததால் திருட்டு முயற்சியை கைவிட்டு சென்றுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் இப்ராகீம் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நஸ்ரின் (23). இவர் வீட்டை உள்புறம் பூட்டிவிட்டு தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
மர்ம நபர்கள் வீட்டின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே வந்து வீட்டின் கதவை தட்டியுள்ளனர். இந்த நேரத்தில் யார் கதவை தட்டுகிறார்கள் என்று அதிர்ச்சி அடைந்த நஸ்ரின் இதுபற்றி அருகில் வசித்து வரும் தனது அண்ணனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இதுபற்றிய புகார்களின் பேரில் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன், இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று திருட்டு சம்பவம் நடந்த வீட்டையும், திருட முயன்ற வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story