சரண் அடைந்த பிரபல ரவுடி சூர்யா சிறையில் அடைப்பு


சரண் அடைந்த பிரபல ரவுடி சூர்யா சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 11 July 2018 10:44 PM GMT (Updated: 11 July 2018 10:44 PM GMT)

சென்னை மாநகர போலீஸ் தென்சென்னை இணை கமிஷனர் முன்பு சரண் அடைந்த பிரபல ரவுடி சூர்யாவை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தாம்பரம்,

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விசுவநாதன் உத்தரவின் பேரில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (வயது32) என்பவர் மீது பீர்க்கன்காரணை, சேலையூர், ஓட்டேரி, மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 52 வழக்குகள் உள்ளன.

ரவுடி சூர்யாவை பிடிக்க சேலையூர் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சேலையூர் பகுதியில் ஆயுதங்களுடன் அவரது கூட்டாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தன்னை போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்த ரவுடி சூர்யா பரங்கிமலையில் உள்ள தென்சென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைந்தார். அவரை பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவந்தனர். அவருடைய கூட்டாளிகள் இருக்கும் இடம் குறித்து அனைத்து விவரங்களையும் சேகரித்தனர்.

அதன் பின்னர் நேற்று மாலை ரவுடி சூர்யாவை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ரவுடி சூர்யா சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவர் விசாரணையின்போது குளியலறையில் வழுக்கி விழுந்து காலில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ரவுடிகள் கூட்டத்தை முழுமையாக சென்னை புறநகரில் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரவுடி சூர்யாவின் கூட்டாளிகள் அனைவரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story