தமிழகத்தில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


தமிழகத்தில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 12 July 2018 7:52 AM GMT (Updated: 12 July 2018 7:52 AM GMT)

தமிழகத்தில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நெல்லை, 

தமிழகத்தில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அழகுமுத்துக்கோன் குருபூஜை

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய சிலைக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் பூபேந்திரயாதவ் எம்.பி,. மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் பூபேந்திரயாதவ் எம்.பி, நிருபர்களிடம் கூறுகையில்,‘

அனைத்து மக்களுக்கும் அதிகாரம் அளிக்கவேண்டும் என்ற நினைப்பில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஆதார் கார்டு வந்த பிறகு அனைத்து தரப்பு மக்களும் அரசின் மூலம் கிடைக்கக்கூடிய பணபலன்கள் அவர்களுடைய வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். சரக்கு சேவை வரி மத்திய-மாநில அரசுகளுக்கு வருவாயை அதிகரித்து உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. தேசிய தலைவர் அமித்ஷா, சென்னையில் 50 ஆயிரம் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கலந்து ஆலோசனை நடத்தி உள்ளார். பாரதீய ஜனதா கட்சி ஊழலை எதிர்த்து ஆட்சிக்கு வந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அதிக வளர்ச்சி அடைந்து உள்ளது. வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாரதீய ஜனதா கட்சிதான் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது என்று அமித்ஷா கூறியது உண்மைதான். தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். கூட்டணி குறித்து அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும்’ என்றார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘தமிழகத்தில் வரக்கூடிய எந்த ஒரு நல்லதிட்டங்களையும் எதிர்ப்பவர்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்கான விரோதிகள் தான். தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்து உள்ளது. இதை தமிழக அரசு கட்டுப்படுத்தவேண்டும் மத்திய உள்துறை என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ? அதை எடுத்து வருகிறது. தி.மு.க. ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் அரசு அவர்களுடன் தான் தற்போது தி.மு.க.வினர் கூட்டணி வைத்து உள்ளனர்’ என்றார்.

Next Story