நீர்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணை நீர்மட்டம் 84 அடியை தாண்டியது


நீர்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணை நீர்மட்டம் 84 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 12 July 2018 11:00 PM GMT (Updated: 12 July 2018 7:51 PM GMT)

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்துவருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 84 அடியை தாண்டியது.

பவானிசாகர்,

பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 120 அடி ஆகும். இதில் 15 அடி சேறும், சகதியும் போக 105 அடியாக அணையின் நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பவானி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 729 கன அடி தண்ணீர் வந்தது. பின்னர் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து மாலை 4 மணி அளவில் வினாடிக்கு 15 ஆயிரத்து 326 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 81.80 அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 822 கன அடி நீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 84.16 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 84 அடியை தாண்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


பவானிசாகர் அணையில் மீன் பிடிக்க தனியாருக்கு ஏலம் விடப்பட்டு உள்ளது. இதனால் அணையில் இருந்து மீனவர்கள் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பவானிசாகர் அணை மற்றும் அதன் நீர்த்தேக்கப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் அணையில் கடல்போல் அலைகள் எழும்புவதால் பரிசல் மூலம் அணையில் மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் பரிசல்களை கரையோரங்களில் வைத்துவிட்டு மீன்பிடிப்பதற்காக காத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘பலத்த காற்று வீசுவதால் பவானிசாகர் அணையில் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளோம். மேலும் அணைக்கு சென்றாலும் வலைகளை அணையில் வீசமுடிவதில்லை. காற்று பலமாக வீசுவதால் வலைகள் அனைத்தும் சேதமடைகிறது. இதனால் மீன் பிடிக்க செல்ல முடியாமல் கரையில் ஏமாற்றத்துடன் காத்திருக்கிறோம். மேலும் மீன்பிடி தொழிலை தவிர வேறு எந்த வேலைகளும் எங்களுக்கு தெரியாது. அதனால் அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் பெரிதும் சிரமப்படுகிறோம். எனவே எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story