165 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்


165 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 12 July 2018 10:30 PM GMT (Updated: 12 July 2018 8:15 PM GMT)

165 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர்,

தாந்தோன்றி ஒன்றியம், ஆண்டான்கோவில் மேற்கு, கந்தன் மகாலில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் வேளாண்மைத்துறை, ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை வாயிலாக சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் ஒருவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 30 பேருக்கு நத்தம் பட்டா நகல், ஒருவருக்கு அடங்கல் மற்றும் புலப்பட நகல், 10 பேருக்கு பட்டா பெயர் மாற்றம், 4 பேருக்கு நத்தம் பட்டா பெயர் மாற்றம், 7 பேருக்கு உட்பிரிவு பட்டா பெயர் மாற்றம், 88 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 4 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரண உதவித்தொகை, 7 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 2 பேருக்கு விதவை உதவித்தொகை, 2 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ஒருவருக்கு கல்வி உதவித்தொகை, 2 பேருக்கு திருமண உதவித்தொகை, முதியோர் வேளாண் துறையில் 3 பேருக்கு இடுபொருட்களும், தோட்டக்கலைத்துறை சார்பில் 3 பேருக்கு வேளாண் உபகரணங்களும் என மொத்தம் 165 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 12 ஆயிரத்து 326 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல் படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளின் வாயிலாக திட்டங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அம்மா திட்ட முகாம், மக்கள் தொடர்பு திட்ட முகாம், குறைதீர்க்கும் நாள் முகாம் மூலமாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது. கல்விக்காக ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு 14 வகையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பெண்களின் நிலையை உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். சம்பளத்துடன் கூடிய பேறு கால விடுப்பானது 6 மாதத்திலிருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு 14 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. 40 சதவீதம் குறைபாடு இருந்தாலே அனைவருக்கும் உதவித்தொகை வழங்கலாம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிர மணியம், வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி, வட்டாட்சியர் கற்பகம், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் திருவிக, மார்க்கண்டேயன், கமலக் கண்ணன், சிவசாமி, ரேணுகாமோகன்ராஜ், ஜெயராஜ், மல்லிகாசுப்பராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story