அரசு பஸ்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்


அரசு பஸ்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 July 2018 10:00 PM GMT (Updated: 12 July 2018 8:39 PM GMT)

திருப்பூர் அருகே அரசு பஸ்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம், 

கோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கல்லூரிகளில் திருப்பூரை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பலர் கல்லூரி பஸ்களிலும், பலர் அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். மேலும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அலுவலகங்களுக்கு சென்றுவருகிறார்கள்.

இதில் திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து திருமுருகன்பூண்டி, அவினாசி, தெக்கலூர், கருமத்தம்பட்டி வழியாக கோவைக்கு செல்லும் வழித்தடம் தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களின் பயண நேரம் குறைவாக இருக்கும். இதனால் பெரும்பாலான மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களையே விரும்பிவருகிறார்கள். இதனால் இந்த வழித்தடத்தில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

கடந்த வாரம் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் இடைநில்லா பஸ்கள் மற்றும் சொகுசு பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதைதொடர்ந்து, காலை 6.20 மணி முதல் 8 மணி வரை அவினாசி வழியாக கோவைக்கு செல்லும் சுமார் 13 அரசு பஸ்களில் புதிதாக இயக்கப்பட்ட 4 பஸ்கள் இடைநில்லா பஸ்களாக மாற்றப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அவை இடையில் எங்கும் நிற்காமல் சென்று வந்தன.

இதன்காரணமாக அந்த 4 பஸ்களிலும் வழக்கமாக சென்றவர்கள் அதற்கு பதிலாக அந்த வழியாக வரும் மற்ற பஸ்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த பஸ்களில் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருப்பதால் சில நிறுத்தங்களில் அரசு பஸ்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் திருமுருகன்பூண்டி பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை வழக்கம் போல அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பக்கம் மற்றும் பின்பக்க படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிகள் பயணம் செய்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒருசில பஸ்கள் அங்கு நிற்காமல் சென்று விட்டன. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு ஒன்றன் பின் ஒன்றாக சென்ற 3 இடைநில்லா பஸ்களும் திருமுருகன்பூண்டி வந்த போது, அவற்றை மறித்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, காலை நேரத்தில் செல்லும் பஸ்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் திருமுருகன் பூண்டியில் நிற்பதில்லை. எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுக்கும்படி போலீசார் கூறியதுடன், 3 பஸ்களையும் அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் வேலுவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி காலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story