போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் நாராயணசாமி உறுதி


போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 12 July 2018 11:15 PM GMT (Updated: 12 July 2018 8:56 PM GMT)

போலி ஏ.டி.எம். கார்டு வழக்கில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-


போலி ஏ.டி.எம். கார்டு மோசடி தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் பாலாஜி, ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கார்கள், லேப்டாப், சுவைப்பிங் மெஷின்கள், ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி மற்றும் சிறிய அளவிலான கேமராக்களை பொருத்தி தகவல்களை திருடி போலியாக ஏ.டி.எம். கார்டுகள் தயார் செய்து இந்த பணமோசடி சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு, கேரளா, போன்ற மாநிலங்களிலும் இந்த மோசடி கும்பல் உள்ளது.


இந்த கும்பலுக்கு சந்துருஜி ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார். அவரை சென்னை பெசன்ட் நகரில் வைத்து நமது புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். மிகப்பெரிய மோசடியை நமது காவல்துறை கண்டுபிடித்து உள்ளது. இந்த கும்பலிடம் கனடா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பணத்தை இழந்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்துருஜியை மீண்டும் விசாரித்தால் முழுமையான தகவல்கள் கிடைக்கும். இந்த மோசடியை கண்டு பிடித்து குற்றவாளிகளை கைது செய்த புதுவை காவல்துறைக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமின்றி யார் தலையிடுமில்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Next Story