1000 சதுர அடி வீட்டிற்கு குப்பை வரி கிடையாது: வீட்டுவரி 25 சதவீதம் குறைப்பு அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


1000 சதுர அடி வீட்டிற்கு குப்பை வரி கிடையாது: வீட்டுவரி 25 சதவீதம் குறைப்பு அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 July 2018 10:45 PM GMT (Updated: 12 July 2018 9:08 PM GMT)

1000 சதுர அடி அளவுள்ள வீடுகளுக்கு குப்பை வரி கிடையாது. உயர்த்தப்பட்டதில் இருந்து வீட்டு வரி 25 சதவீதம் குறைக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணிகள், புள்ளி விவரங்கள், கட்டிட செயல்முறை திட்டங்கள் போன்ற துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-


புதுச்சேரி சோலைநகரில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.18 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும். நகராட்சிக்கு 8 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் அகற்றும் வாகனம் வாங்கப்படும். ரூ.37.50 லட்சம் செலவில் நடமாடும் கழிப்பிட (மொபைல் டாய்லெட்) வசதிகள் செய்து தரப்படும். மகளிருக்காக அண்ணா திடல் பகுதியில் கழிப்பிட வசதி செய்து தரப்படும்.

அரும்பார்த்தபுரம் ரோஜா நகர் பூங்கா ரூ.26 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும். கருவடிக்குப்பம் பகுதியில் உட்புற சாலைகள் ரூ.1.03 கோடி செலவில் மேம்படுத்தப்படும். பாகூரில் ரூ.2 கோடியில் பஸ்நிலையம் அமைக்கப்படும். கிருமாம்பாக்கம், கன்னியகோவில், கரையாம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைத்து தரப்படும். மூலக்குளம் ஆசிரியர் காலனியில் உள்ள பூங்கா மேம்படுத்தப்படும்.


காரைக்காலில் ரூ.5 கோடியில் கழிவுநீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். சட்டமன்றத்தில் பேசிய பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் குப்பைக்கு நமது மாநிலத்தில் மட்டும்தான் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அனைத்து மாநிலங்களிலும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. 2016 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில் இது போடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் புதுவையில் 500 சதுர அடி அளவுக்கு குறைவான வீடுகளுக்கு ஏற்கனவே குப்பைக்கு வரி விதிக்கப்படவில்லை. இனி 1000 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு மட்டுமே குப்பை வரி செலுத்தவேண்டும்.

அதாவது 1000 முதல் 2 ஆயிரம் சதுர அடி அளவுள்ள வீடுகளுக்கு மாதந்தோறும் ரூ.50 குப்பை வரியாக செலுத்தவேண்டும். 2 ஆயிரம் சதுர அடிக்கு மேல் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனால் புதுவை நகராட்சி பகுதிகளில் உள்ள 39 ஆயிரத்து 855 வீடுகளில் 20 ஆயிரம் வீடுகளுக்கு குப்பை வரி வராது.


அதேபோல் உழவர்கரை நகராட்சியில் உள்ள 52 ஆயிரத்து 395 வீடுகளில் 27 ஆயிரம் வீடுகளுக்கு குப்பை வரி வராது. வீட்டுவரி ஒட்டுமொத்தமாக உயர்த்தப்பட்டதில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.

கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் 196 தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான கோப்பு நிதித்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ந்தேதி முதல் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

Next Story