அஞ்சல் துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கடிதம் எழுதும் போட்டி


அஞ்சல் துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கடிதம் எழுதும் போட்டி
x
தினத்தந்தி 12 July 2018 10:15 PM GMT (Updated: 13 July 2018 12:17 AM GMT)

அஞ்சல் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கடிதம் எழுதும் போட்டி 2 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.

சிவகங்கை,

இதுகுறித்து சிவகங்கை கோட்ட தபால் துறை கண்காணிப்பாளர் சிவநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


இந்திய அஞ்சல் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி “என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்“ என்ற தலைப்பில் இந்த ஆண்டிற்கான கடிதம் எழுதும் போட்டி நடைபெற உள்ளது. கடிதத்தை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம். இந்த போட்டி 18 வயது வரை மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு என தனித்தனியாக நடைபெறும். கடிதத்தின் அளவாக “என்வலப்“ பிரிவில் எழுதுவோர் ஏ4 அளவு வெள்ளைத்தாளில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். “இன்லாண்டு லெட்டர்“ பிரிவில் எழுதுவோர், 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அஞ்சலகங்களில் விற்கப்படும் கடித உறை அல்லது வேறு உறைகள், தேவையான அளவு அஞ்சல் தலை ஒட்டப்பட்டவை மற்றும் இன்லாண்டு லெட்டர் கார்டுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கூரியர் மூலம் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேரில் கொண்டு வந்து கையில் கொடுக்கும் கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


போட்டி தொடங்கும் நாள் வருகிற 15-ந்தேதி. கடிதங்களை அனுப்ப கடைசி தேதி 30-ந்தேதி. கடைசி தேதிக்கு பின் அனுப்பப்படும் கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது. கடிதங்களை ஸ்கேன் செய்து “மைகவ் ( MyGov portal )” என்ற அரசு இணையதளத்திலும் வருகிற 30-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம். எனினும் தபால் மூலம் 30-ந்தேதி அல்லது அதற்கு முந்தைய அஞ்சலக தேதி முத்திரையுடன் கூடிய கடிதத்தை முதன்மை அஞ்சல் துறைத்தலைவர், சென்னை-2 என்ற முகவரிக்கு கட்டாயமாக அனுப்பப்பட வேண்டும். மேலும் உறையின் மேல், “ அஞ்சல் துறை கடித போட்டி“ என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story