வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட டிரைவர்கள்


வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட டிரைவர்கள்
x

மினிவேன்கள் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில், கடந்த 10-ந்தேதி கரூர் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போக்குவரத்து விதிகளை மீறி பயணிகளை ஏற்றி வந்ததாக 11 மினி வேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவற்றை திண்டுக் கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர். இந்தநிலையில், மினி வேன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் சரவணன் தலைமையில் நேற்று 60-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தை சந்தித்து மினி வேன்களை விடுவிக்குமாறு வலியுறுத்தினர். இதுதொடர்பாக, ஆனந்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மினி வேன்களுக்கு சுற்றுலா போன்று மொத்தமாக ஆட்களை ஏற்றி செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பஸ்கள் போல டிக்கெட் கொடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர்.

இதனால் விதிகளை மீறி பயணிகளை ஏற்றி செல்லும் மினிவேன்கள் விபத்துகளில் சிக்குவதை தடுக்கும் வகையில் அவற்றை பறிமுதல் செய்ய கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பயணிகளை ஏற்றி செல்லும் மினி வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, மாவட்டம் முழுவதும் விதிகளை மீறி பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story