சட்டசபையை 2-வது நாளாக சிவசேனா முடக்கியது


சட்டசபையை 2-வது நாளாக சிவசேனா முடக்கியது
x
தினத்தந்தி 13 July 2018 12:28 AM GMT (Updated: 13 July 2018 12:28 AM GMT)

சட்டசபையை 2-வது நாளாக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா முடக்கியது.

நானார் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையை 2-வது நாளாக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா முடக்கியது. இதனால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாக்பூா்,

ரத்னகிரி மாவட்டம் நானார் பகுதியில் எண்ணெய் சுத்தி கரிப்பு ஆலை அமைப்பதற்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாக்பூரில் நடைபெற்று வரும் மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் இந்த பிரச்சினையால் முடங்கியது. நேற்று 2-வது நாளாக கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளும், சிவசேனாவும் இந்த பிரச்சினையை கையில் எடுத்தன.

சட்டசபை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட் டீல் எழுந்து, மற்ற விவாதங்கள் அனைத்தையும் ஒத்திவைத்து விட்டு நானார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பிரச்சினை குறித்து விவாதிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த திட்டத்தால் நானாரை சுற்றியுள்ள சுமார் 17 கிராமங்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்த அவர், இந்த திட்டத்தை கைவிடும் வரை சட்டசபையை நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று எச்சரித்தார்.

இதனால் சட்டசபையில் அமளி நிலவியது. இதையடுத்து சபாநாயகர் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

மீண்டும் சட்டசபை கூடியபோதும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாஸ்கர் ஜாதவ் இதே பிரச்சினை குறித்து பேசினார்.

அப்போது அவர், “ இது வெறும் 17 கிராமங்களை குறித்த பிரச்சினை இல்லை. நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சுமார் 1,200 மீட்டர் தொலைவில் தான் ஜெய்தாப்பூர் அணுமின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது மிகப்பெரிய பேரிடருக்கு வழிவகுக்கும். நம் வருங்கால சமுதாயம் உயிருடன் வாழ்வதற்காக தான், நமக்கு வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் தேவை” என்றார்.

இதனால் சட்டசபையில் மீண்டும் அமளி ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சியினர் அவையின் மையப்பகுதிக்கு சென்று சபாநாயகரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மீண்டும் சில நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பல முறை சபை கூடியபோதும் தொடர்ந்து சிவசேனா மற்றும் எதிர்க்கட்சிகளின் நானார் எதிர்ப்பு குரல் ஒளித்துக்கொண்டே இருந்தது. இதையடுத்து வேறு வழியின்றி சபாநாயகர் சட்டசபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

இதேபோல் மேல்-சபையிலும் நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் துலே அருகே குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி 5 பேர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் ஆகிய பிரச்சினைகள் சபையின் அமைதியை கெடுத்தன.

இதையடுத்து மேல்-சபை தலைவர் நாள் முழுவதும் சபையை ஒத்திவைத்தார். 

Next Story