திருச்செந்தூர் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் மனு


திருச்செந்தூர் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 13 July 2018 9:30 PM GMT (Updated: 13 July 2018 2:11 PM GMT)

திருச்செந்தூர் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்று அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு கொடுத்தார்

தூத்துக்குடி, 

திருச்செந்தூர் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்று அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

கோரிக்கை மனு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது;–

திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட புன்னக்காயல் 12 ஆயிரம் மக்கள் வசிக்கின்ற பெரிய கிராமம். இங்கு உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2017–18–ம் ஆண்டு என்னுடைய சட்டமன்ற நிதியில் இருந்து தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்க ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 5 லட்சம் லிட்டர் கொள்ளவு உள்ள நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இங்கு இருந்து குடிநீர் வினியோகத்திற்கான குழாய்கள் பதிக்கப்படாமல் உள்ளது. எனவே போதிய நிதி ஒதுக்கீடு செய்து குழாய்கள் பதித்து இந்த மக்களுக்கு குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.

2 பாலங்கள்

சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள புத்தன்தருவை குளம், புத்தன்தருவை கிராமத்தில் 755 ஏக்கர் நீர் பிடிப்பு புறம்போக்கும், கொம்மடிக்கோட்டை கிராமத்தில் 150 ஏக்கர் நீர்ப்பிடிப்பு புறம்போக்கும் கொண்ட மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். இந்த குளத்தை ஆழப்படுத்தி, கரையமைத்தல் வேண்டும். 4–வது ரீச் குளங்களில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளநீர் புத்தன்தருவை குளத்திற்கு வரும் வழியில் உள்ள தட்டார்மடம்– புத்தன்தருவை சாலையை கடக்கும் இடத்தில் 2 உயர்மட்ட பாலங்கள் அமைக்க வேண்டும். இதனால் மழை காலங்களில் மாதக்கணக்கில் போக்குவரத்து துண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

திருச்செந்தூர் தொகுதி, ஆழ்வார்திருநகரி ஒன்றியம், ராஜபதி ஊராட்சி மணத்தி கிராமத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் அண்ணாத்துரை கடந்த 30.6.2018–க்கு பின்னர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். காணாமல போன அண்ணாத்துரையை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாக்கடை

திருச்செந்தூர் நகரத்தின் மையப்பகுதி வழியாக செல்லும் எல்லப்பன் நாயக்கன் குளம், ஆவுடையார் குளம் உபரி நீர் வடிநீர் கால்வாய் குப்பையும், கழிவுகளும் மண்டி கிடக்கும் நிலையில் உள்ளது. இதனால் நோய் பரவும் நிலை உள்ளது. நகரில் உள்ள வீடுகளில் இருந்தும் கழிவுநீர் இந்த கால்வாய்க்கு தான் வருகிறது. இந்த கால்வாயில் உள்ள சுகாதார கேட்டை போக்க, கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு வடிநீர் கால்வாயை தூர்வாரி சிலாப் அமைத்திட வேண்டும்.

மேலும் இந்த நகரில் கழிவுநீர் வெளியேற பாதாள சாக்கடை திட்டம் 1997–ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 2010–ல் திருத்தி அமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.14.48 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு 2015–ம் ஆண்டு முதல்–அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவு பெறாமல் வெறும் 50 வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. நகரில் இருந்து கழிவு நீர் வெளியேற பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக முழுமையாக முடித்திட வேண்டும்.

திருச்செந்தூர் தொகுதி வீரபாண்டியன் பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்கள், பெரியதாழையை சேர்ந்த 3 மீனவர்கள் என 7 பேர் 2017–ம் ஆண்டு ஈரான் நாட்டுக்கு சென்றனர். அவர்களுக்கு அங்கு சரியாக ஊதியம், உணவு வழங்கப்படவில்லை. கடந்த மாதம் 20–ந்தேதி முதல் அவர்களுக்கு தங்குவதற்கான இடம் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story