கடையநல்லூர் அருகே பஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்: திருமணம் ஆன 13 நாளில் புதுப்பெண் அண்ணனுடன் பலி தந்தை–கணவர் கண்முன்னே பரிதாபம்


கடையநல்லூர் அருகே  பஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்: திருமணம் ஆன 13 நாளில் புதுப்பெண் அண்ணனுடன் பலி தந்தை–கணவர் கண்முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 13 July 2018 10:00 PM GMT (Updated: 13 July 2018 3:20 PM GMT)

கடையல்லூர் அருகே பஸ்–மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், திருமணம் ஆன 13 நாளில் புதுப்பெண் தனது அண்ணனுடன் பலியானார்.

கடையநல்லூர், 

கடையல்லூர் அருகே பஸ்–மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், திருமணம் ஆன 13 நாளில் புதுப்பெண் தனது அண்ணனுடன் பலியானார்.

பஸ்– மோட்டார்சைக்கிள் மோதல்

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 25). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இவருக்கும், மேல கடையநல்லூரை சேர்ந்த ஹேமலதா (22) என்பவருக்கும் கடந்த 1–ந் தேதி திருமணம் நடந்தது.

இந்த நிலையில் புதுமண தம்பதி நேற்று காலை மோட்டார்சைக்கிளில் இலத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றனர். அவர்களுடன் ஹேமலதாவின் தந்தை பரமசிவமும், அண்ணன் சுந்தர பாலகிருஷ்ணனும் (24) மற்றொரு மோட்டார்சைக்கிளில் சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மாலை 3 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டனர். வரும்போது புதுமாப்பிள்ளை செல்வராஜ், அவருடைய மாமனார் பரமசிவம் ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளிலும், சுந்தர பாலகிருஷ்ணன், ஹேமலதா ஆகியோர் மற்றொரு மோட்டார்சைக்கிளிலும் வந்து கொண்டிருந்தனர்.

அண்ணன்–தங்கை சாவு

கடையநல்லூரை அடுத்த மங்களாபுரம் விலக்கு அருகே சென்றபோது, எதிரே அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், சுந்தர பாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் சுந்தர பாலகிருஷ்ணன், ஹேமலதா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சுந்தர பாலகிருஷ்ணன், ஹேமலதா ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

தனது கண் எதிரே மகனும், மகளும் பிணமாக கிடந்ததை பார்த்து பரமசிவமும், புதுமனைவி ஹேமலதாவின் உடலை பார்த்து செல்வராஜூம் கதறி அழுதனர். திருமணம் ஆகி 13 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் தனது அண்ணனுடன் விபத்தில் பலியான இச்சம்பவம் இரு வீட்டாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story