மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்க வேண்டும் மாணவ-மாணவிகள் கோரிக்கை


மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்க வேண்டும் மாணவ-மாணவிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 July 2018 10:45 PM GMT (Updated: 13 July 2018 6:01 PM GMT)

மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவிலுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கூர்,

நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் அதிக மக்கள் தொகையை கொண்டதாகும். இங்கு 3 மேல்நிலைப் பள்ளிகள், ஒரு நடுநிலைப் பள்ளி, தனியார் கல்லூரி ஆகியவை உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு பாலவெளி, மன்னம்பந்தல், வடகரை, ஆறுபாதி, விளநகர், கஞ்சாநகரம், மணக்குடி, மேலையூர், கருவாழக்கரை, ஆலவேலி, சேமங்கலம், சாத்தனூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், கீழையூர், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி கற்க வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் பஸ்களில் தான் சென்று வருகின்றனர்.

ஆனால் குறைவான பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலர்கள், கூலி தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் அதிகமாக பயணிப்பதால் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அப்போது திருட்டு சம்பவங்களும் நடக்கிறது. மேலும் ஆபத்தை உணராத மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கி கொண்டு பயணிப்பது வாடிக்கையாக உள்ளது.


முகூர்த்த நாட்களில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏறுவதால் அன்றைய நாட்களில் பெரும்பாலான நிறுத்தங்களில் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. அதிக தூரத்தில் வசிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே காலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்காக மயிலாடுதுறையில் இருந்து மன்னம்பந்தல் வழியாகவும், மேலப்பாதி வழியாகவும் செம்பனார்கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்க வேண்டும். இதேபோல் மாலை நேரத்தில் செம்பனார்கோவிலில் இருந்து மேற்கண்ட ஊர்களின் வழியாக மயிலாடுதுறைக்கு சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என்று பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story