சேலம் இரும்பாலை அருகே 16-ம் நூற்றாண்டு வீரக்கல் கண்டுபிடிப்பு


சேலம் இரும்பாலை அருகே 16-ம் நூற்றாண்டு வீரக்கல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 13 July 2018 9:30 PM GMT (Updated: 13 July 2018 6:45 PM GMT)

சேலம் இரும்பாலை அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

சேலம்,

கெங்கவல்லி மின்வாரியத்தில் பணிபுரியும் செந்தில் குமார், ராமச்சந்திரன் ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர் பெருமாள், டாக்டர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், கவிஞர் மன்னன், வீரமணி ஆகியோர் அடங்கிய குழுவினர் சேலம் இரும்பாலைக்கு அருகே உள்ள திருமலைகிரி ஊராட்சி வேடுகாத்தான்பட்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள தாமரை ஏரியின் கிழக்கு பகுதியில் சாலையின் அருகே ஒரு வீரக்கல் இருப்பது கண்டறியப்பட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வுமையத்தினர் கூறியதாவது:- அந்த காலத்தில் போரில் இறந்த வீரர்களுக்கு வீரக்கல் எடுப்பது வழக்கம். புலியோடு போரிட்டு இறந்த வீரர்கள், பயிர்களை அழித்த காட்டுப்பன்றி வேட்டையின்போது இறந்த வீரர்களுக்கு வீரக்கல் எடுக்கப்பட்டது. வேடுகாத்தான்பட்டி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள வீரக்கல்லானது போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு எடுக்கப்பட்டதாகும்.

ஒரு கல்லில் புடைப்பு சிற்பமாக இந்த வீரக்கல் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்லின் உயரம் 95 செ.மீ, அகலம் 126 செ.மீ. இதில் போர் புரியும் நிலையில் தரையில் நின்றபடி இரு வீரர்களும், குதிரையில் அமர்ந்து போர்புரியும் ஒரு வீரனும், தனியாக ஒரு குதிரையும் காட்டப்பட்டுள்ளது. வலது புறம் வீரக்கல்லானது மேற்புறம் உடைந்துள்ளது.

குதிரைவீரன் முகம் வலதுபுறம் திரும்பிய நிலையில் தன் வலது கையில் உள்ள வாளால் எதிரி, வீரனின் மார்பில் குத்துவதைப்போல் போர்காட்சி உள்ளது. இந்த இரு வீரர்களுக்கு அருகே மூன்றாவதாக ஒரு வீரன் உள்ளான். போரில் இறந்த வீரர்களுக்காக எடுக்கப்பட்ட வீரக்கல் இதுவாகும்.

16-ம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் பாளையக்காரர்களாக இப்பகுதியை கெட்டிமுதலி வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆண்டு வந்தனர். அப்போது போர் ஏற்படும் காலங்களில் மதுரை நாயக்கர் மன்னர்களுக்கு ஆதரவாக இவர்கள் போரில் ஈடுபட்டனர்.

கி.பி. 1659 மற்றும் கி.பி. 1667-ம் ஆண்டுகளில் மதுரை நாயக்க மன்னருக்கும் மைசூர் உடையார் மன்னருக்கும் போர் நடைபெற்றது. அந்த போரில் கெட்டிமுதலி படையினர் மதுரை மன்னருக்கு ஆதரவாக போரில் கலந்துகொண்டனர். அந்த போரில் இறந்த கெட்டிமுதலி படை வீரர்களுக்காக எடுக்கப்பட்ட வீரக்கல்லாக இது இருக்கலாம். இவ்வாறு சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

Next Story