மக்கள் பிரச்சினைகளுக்கு போராட்டம் மூலம் தீர்வு முத்தரசன் பேச்சு


மக்கள் பிரச்சினைகளுக்கு போராட்டம் மூலம் தீர்வு முத்தரசன் பேச்சு
x
தினத்தந்தி 13 July 2018 10:15 PM GMT (Updated: 13 July 2018 9:19 PM GMT)

மக்கள் பிரச்சினைகளுக்கு போராட்டங்கள் மூலம் தீர்வு காண முடியும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி அண்ணா தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதிய கிளை தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் முத்துவேல் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் அறிவழகன் வரவேற்றார். துணை செயலாளர் சிவனேசபாண்டியன், பொருளாளர் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். மேலும் அவர் புதிய கிளையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடு முழு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. சமுதாய வளர்ச்சியை அனைத்து கட்சிகளும் வரவேற்கிறது. பாரதீய ஜனதாவும் பேசுகிறது. ஆனால் சமுதாய வளர்ச்சி தான் இல்லை. ஓட்டு போடும் உரிமையில் ஏழை, பணக்காரன் என்ற நிலை இல்லாமல் சமநிலை உள்ளது.

வாழ்க்கையில் சமநிலை இல்லை. மனிதன் தனது வாழ்வில், உயர்வில் சறுக்கு ஏற்படும் போது அதை தலை எழுத்து என்று கூறி முயற்சிக்கவிடாமல் தடை போட்டு வருகிறார்கள். தலை எழுத்து ஒன்றுமில்லை முயற்சி செய்தால் முன்னேறலாம்.


அரசியல்வாதிகளுக்கு மனசாட்சி இல்லை மனசாட்சி என்றால் என்ன? அதன் விலை என்ன? என்று கேட்க கூடிய நிலையில் உள்ளனர் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்றால் நாடு சுடுகாடாகி விடும் என்று ரஜினி சொல்லுகிறார் அது அவரது அனுபவமாக இருக்கலாம். ஆனால் பிரச்சினைகளுக்கு போராட்டம் தான் தீர்வு ஆகும். எத்தனையோ போராட்டங்கள் மூலம் தான் மக்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தேசிய குழு உறுப்பினர் சேதுராமன், மாவட்ட செயலாளர் காளிதாசன், மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி, தொழிற் சங்க மாவட்ட செயலாளர் தினகரன், மோகன், பகுதி செயலாளர் பிச்சைமணி, மாவட்ட குழு உறுப்பினர் முகமது பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story