மக்கள் தொகை பெருக்கம் குறித்து கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்


மக்கள் தொகை பெருக்கம் குறித்து கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 July 2018 11:00 PM GMT (Updated: 13 July 2018 9:38 PM GMT)

புதுவையில் நடந்த உலக மக்கள் தொகை தினத்தில் கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவை இயக்குனரகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் போட்டி நடைபெற்றது. ஊர்வலத்தை சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் பாரதிதாசன் திடலில் தொடங்கி காந்தி திடலில் முடிவடைந்தது.

அதையடுத்து பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வல போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மக்கள் தொகை கட்டுக்குள் அடங்காமல் போய் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் சிறு வயதிலேயே திருமணம், கிராமப்புற மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். இதனால் மக்கள் தொகை பெருக்கம் குறித்து கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும்.

குழந்தைகள் திருமணத்தை தடை செய்ய வேண்டும். குழந்தைகள் அதிகமாக பெற்றுக் கொள்வதால் எவ்வளவு சுமை ஏற்படுகிறது என்று பெற்றோரிடம் வலியுறுத்த வேண்டும். கிராமப்புற மக்களிடம் இளைஞர்கள் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை இயக்குனர்கள் ரகுநாதன், அல்லிராணி, தேசிய கிராமப்புற சுகாதார திட்ட இயக்குனர் காளிமுத்து, அன்னை தெரசா பட்டமேற்படிப்பு நிறுவன புலமுதன்மையர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



Next Story