மணிமங்கலம் கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்த 22 பேர் மீட்பு


மணிமங்கலம் கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்த 22 பேர் மீட்பு
x
தினத்தந்தி 13 July 2018 10:45 PM GMT (Updated: 13 July 2018 9:46 PM GMT)

வந்தவாசி அருகே கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 6 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் மீட்கப்பட்டனர்.

வந்தவாசி,

வந்தவாசி தாலுகா பாதூர் மதுரா மணிமங்கலம் கிராமத்தில் தயாளன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் கடந்த 4 ஆண்டுகளாக 6 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்துள்ளனர்.

இதுபற்றி சென்னை சர்வதேச நீதிக்குழுமம் சார்பில் செய்யாறு உதவி கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் அன்னம்மாள், வந்தவாசி தாசில்தார் முரளிதரன், சமூக நலபாதுகாப்பு தாசில்தார் வாசுகி, பாதூர் பகுதி வருவாய் ஆய்வாளர்கள் விஸ்வநாதன், மாரிமுத்து, காஜா, கிராம நிர்வாக அலுவலர் ரேவதி, கீழ்கொடுங்காலூர் போலீசார் மற்றும் சர்வதேச நீதிக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் ஜபா, டிவைன், களப்பணியாளர் கன்னியப்பன் ஆகியோர் மணிமங்கலம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு கொத்தடிமைகளாக இருந்த தேசூர் அருகே பருவதம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் (வயது 40) குடும்பத்தினர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கன்னிகாபுரத்தை சேர்ந்தவர்கள் முருகன் (25) குடும்பத்தினர் உள்பட 6 குடும்பத்தை சேர்ந்த 22 பேரை அதிகாரிகள் மீட்டனர்.

பின்னர் வந்தவாசி தாலுகா அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களுடைய விருப்பப்படி அனைவரையும் தேசூர் அருகில் உள்ள பருவதம்பூண்டி பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story