பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு
x
தினத்தந்தி 13 July 2018 10:10 PM GMT (Updated: 13 July 2018 10:10 PM GMT)

நெல் பயிரிடும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், 2018-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் சொர்ணவாரி நெல்பயிர் மற்றும் இதர பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யலாம்.

இந்த திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறாக சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் இந்த மாதம் 31-ந் தேதி மற்றும் இதர பயிர்களான உளுந்து மற்றும் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 16-ந் தேதி ஆகும். எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டுத்தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயிர் காப்பீட்டு தொகையில், விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.531 இதர பயிர்களான உளுந்து மற்றும் நிலக்கடலை முறையே ரூ.286, ரூ.475 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

விவசாயிகள் இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story