பனப்பாக்கம் அருகே ஓய்வு பெற்ற வனக்காவலர் வெட்டிக்கொலை


பனப்பாக்கம் அருகே ஓய்வு பெற்ற வனக்காவலர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 13 July 2018 11:00 PM GMT (Updated: 13 July 2018 10:34 PM GMT)

பனப்பாக்கம் அருகே ஓய்வு பெற்ற வனக்காவலரை அவரது மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனப்பாக்கம்,

பனப்பாக்கம் அருகே ஓய்வு பெற்ற வனக்காவலரை அவரது மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள காட்டுப்பாக்கம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 69), ஓய்வு பெற்ற வனக்காவலர். இவருடைய மனைவி ஆயம்மாள் (60). இவர்களுக்கு சாந்தசீலன் (40) என்ற மகன் உள்ளார். இவர் பாறை உடைக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும் பாணாவரம் அருகே உள்ள கோவிந்ததாங்கல் கிராமத்தை சேர்ந்த உமா (35) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரியதர்ஷினி (1) என்ற மகள் உள்ளார். திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்ததால் கோவிந்ததாங்கலில் உள்ள மாமியார் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் சாந்தசீலன் வசித்து வந்தார்.

இதனால், ஓய்வு பெற்ற வனக்காவலர் மாசிலாமணி மட்டும் மனைவியுடன் தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தந்தை மாசிலாமணியிடம் ரூ.1½ லட்சம் கேட்டு சாந்தசீலன் தொந்தரவு செய்துள்ளார். மாசிலாமணி பணம் தர முடியாது என்றார். இதனால் ஆத்திரமடைந்த சாந்தசீலன் தந்தையை அடித்து, உதைத்தார். மேலும் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் கழுத்தில் வெட்டு விழுந்ததில் மாசிலாமணி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அங்கிருந்து சாந்தசீலன் தப்பி ஓடி விட்டார்.

நேற்று காலை மாசிலாமணியின் தங்கை வசந்தா (62) அண்ணனின் வீட்டுக்கு வந்தார். அங்கு மாசிலாமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

பின்னர் பாணாவரம் போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாசிலாமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தசீலனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த சாந்தசீலன் நேற்று காலை காட்டுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் கத்தியுடன் சரண் அடைந்தார். சாந்தசீலன் வாக்குமூலம் அளித்தபோது, தந்தையிடம் பணம் கேட்டபோது அவர் தராமல், வீட்டை விட்டு வெளியே போ என்று கூறி தாக்கியதால் ஆத்திரத்தில் கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டேன் என்று கூறி உள்ளார்.

இதையடுத்து சாந்தசீலனை பாணாவரம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஒப்படைத்தார். சாந்தசீலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்துக்காக தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story