மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: கணவன் சாவு; மனைவி உயிர் ஊசல்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: கணவன் சாவு; மனைவி உயிர் ஊசல்
x
தினத்தந்தி 13 July 2018 11:08 PM GMT (Updated: 13 July 2018 11:08 PM GMT)

கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன் பரிதாபமாக இறந்தார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ரெயிலடி தெருவை சேர்ந்தவர் ராஜூ(வயது 38). விவசாயி. இவரது மனைவி கனகா(32) இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று திருவையாறு அருகே உள்ள திங்களூர் கிராமத்தில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி இருவரும் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

கும்பகோணம்-திருவையாறு சாலையில் மோமேஸ்வரபுரம் பஸ் நிலையம் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திருவையாறில் இருந்து கும்பகோணம் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது.

இதில் கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜூ பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கனகா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின் றனர்.

Next Story